அத்தனைக்கும் ஆசைப்படுவோம்

ஆசை தான் இவ்வுலக உயிரினங்கள் இயங்குவதற்கு மூல காரணமே. முக்கியமாக மனித வளர்ச்சிக்கு ஆசையே மிக இன்றியமையாத பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட ஆசையை விட்டு விட்டால் தான் மனிதனால் நிம்மதியாக வாழ முடியும் என்று பல விதமான போதனைகள் சொல்லிவந்திருக்கிறார்கள்.

இங்கே நான் கொஞ்சம் முரன்படுகிறேன்.

ஆசைப்படுவதை விட்டு விட ஆசைப்படுவதென்பது எப்பொழுதும் நிறைவேறாத ஆசையாகவே தான் இருக்கும். ஆசை இருப்பதால்தான் உயிர்கள் அனைத்திற்கும் வளரனும்கிற நோக்கம், வாழனும்கிற நோக்கம் வருகிறது. பறக்க வேண்டும் என்று மனிதன் ஆசை பட்டதாலேயே அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டது. இறைவனை காண வேண்டும் என்ற ஆசை இருப்பதாலேயே ஆண்மீகம் வளர்ச்சி கண்டது. ஆசை என்பது இல்லை என்றால் உயிரினங்களின் இயக்கம் நின்று போயிருக்கும்.

வாழ்க்கையில் துன்பம் ஆசைப்படுவதால் வருகிறது, அதுனாலயே ஆசைப்படுவதை விட்டு விடுங்கள் என்று சொன்னதன் நோக்கம் சற்று உற்று ஆராய்ந்து பார்த்தோமானால், ஆசையின் நோக்கம் மனதிற்கு மகிழ்ச்சி கொண்டுவருவதே, ஆனால் நாம் நம் மனதின் மகிழ்ச்சிக்கான தூண்டுதலை நாம் நமக்குள்ளேயே தேடாமல், அது வெளிச்சூழ்நிலை கொண்டு தீர்மானிக்கும் வகையில் நாம் நம் ஆசையை வளர்த்துக் கொண்டதாலேயே பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சி கிட்டுவதில்லை.

எப்பொழுது மனதிற்கு ஆசையினால் கஷ்டம் வருகிறது என்று யோசித்தால், நமது ஆசை பொருள் நோக்கத்தில் போகும் பொழுது தான். ஏனெனில் பொருள் நோக்கத்தில் ஆசை போகும் பட்சத்தில் அது நிறைவேறுவதற்கான சாத்தியம் கிடையாது.

எப்படி?

உங்கள் அண்டைவீட்டுக்காரர் மாதம் லகரம் சம்பளம் வாங்குகிறார் என்றால் உங்கள் மனைவிக்கு நீங்கள் அவரைவிட ஒரு ரூபாய் அதிகம் சம்பளமாக
வாங்கினால் தான் மகிழ்ச்சி, அவர் ஆசையை பூர்த்தி செய்வதில் தான் உங்கள் மகிழ்ச்சி இருக்கிறது என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்குவோம். நீங்கள் பொருள் ஈட்டுவதில் அவரை விட பின்தங்கிப்போனால் நீங்கள் தொன்னூறு ஆயிரம் சம்பாதித்தும் மகிழ்ச்சி இருக்காது, மாறாக மனதுக்கு வருத்தம் தான் வரும்.

சரி, அவரை விட உங்கள் மனைவி ஆசைப்பட்டதுபோல சம்பாதிதுவிட்டால் உங்கள் இருவரின் ஆசையும் முற்றுப் பெற்றுவிட்டதா என்றால் இல்லை, அது அடுத்த நிலைக்கு தாவிவிடுகிறது. இப்படி பொருள் நோக்கத்தில் வருகிற ஆசை முழுமை பெறுவதில்லை.ஆசையின் நோக்கம் என்பது விரிவடைய வேண்டும் என்பதே. எது ஒன்றை ஆசைக்கு எல்லை என்று வகுக்கிறோமோ அதை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும் என்பதே ஆசையின் இயல்பு.

உங்கள் ஆசை அல்லது தேடல் என்பது பணமாக இருக்கட்டும், பொருளாக இருக்கட்டும், புகழாக இருக்கட்டும், கடவுளை காண்பதாக இருக்கட்டும் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும் அடிப்படையாகப் பார்த்தால் உங்களது ஆசை என்பது சந்தோஷத்தின் தேடலில் தான் இருக்கிறது.
மனம் ஆசையை உருவாக்குகிறது. அந்த ஆசை நிறைவேறிவிட்டால் மகிழ்ச்சிப் படுவதும், நிறைவேறாவிட்டால் துக்கப்படுவதும் நம் கையில் தான் இருக்கிறது. ஆசைகள் நிறைவேறாத பட்சத்தில் அதை ஒரு பெரிய தோல்வியாக, ஏமாற்றமாக, இழப்பாக, வேதனையாக எடுத்துக்கொள்ளாமல் எந்தச் சூழ்நிலையிலும் நாம் நம் மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போமேயானால், இன்பம் துன்பம் இரண்டையும் சமமாக பார்க்கும் மனநிலை, மனோபாவம் நம்மிடம் இருக்குமேயானால், ஆசைப் படுவதால் எந்தப் பாதிப்பும் இல்லை, ஆசையை விட்டு விட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எது உங்கள் மனதுக்கு பெரிய ஆசை என்று படுகிறதோ அதையே நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.

அதனால் அத்தனைக்கும் ஆசைப்படுங்கள், உங்கள் ஆசை என்பது உங்கள் மகிழ்ச்சி சார்ந்ததாக இல்லாமல் மற்றவருக்கும் அது மகிழ்ச்சி தரும் பட்சத்தில் உங்களது எந்த ஆசையும் ஞாயமானதே என்பதே என் கருத்து.

இப்படியும் சில மனிதர்கள்

நானும் என் நண்பனும் திருச்சியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ஞாயிறு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்ப திங்கள் கிழமை காலை ஆறு மணிக்கு பேருந்து பிடித்தால் 8.30 மணிக்கு கல்லூரியில் இருக்கலாம் என்று கணக்குப் போட்டு விடுமுறை நாட்களுக்கு ஊருக்கு வந்து போவது வழக்கம்.

அப்படி ஒரு திங்கள் கிழமை காலை கொட்டாம்பட்டியில் இருந்து திருச்சிக்கு பேருந்து ஏறினோம். பேருந்து இருக்கைகள் நிரம்பி விட்டதால் நானும் என் நண்பனும் நின்று கொண்டு பயனித்தோம். பேருந்து துவறங்குறிச்சி என்ற ஊர் தாண்டி ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் பயணித்திருக்கும், ஐயோ எம்புள்ளையா காப்பாத்துங்களேன்னு ஒரு பெண்ணின் குறல் வண்டிக்குள் கேட்டது.

ஓட்டுநர் உடனடியாக வண்டியை நிறுதினார். அந்தப் பெண்ணின் அருகில் சென்று பார்த்த போது அவர் மடியில் படுத்திருந்த இரண்டு வயது குழந்தை வாயில் நுரைதல்ல பேச்சு மூச்சற்று கிடந்தது. அந்தத் தாய் செய்வதறியாது கண்களில் இருந்து கண்ணீர் கண்ணங்களில் வழிந்தோட அழுதுகொண்டே பேருந்திலிருந்தவர்களைப் பார்த்து எம்புள்ளையக் காப்பாத்துங்க என்று புழம்பிக்கொண்டே இருந்தார்.

நடத்துநர் மற்றும் பயணிகளில் மூத்தவர்கள் சில உத்தியோகஸ்தர்கள் ஆளுக்கொரு யோசனை சொல்லிகொண்டே இருந்தார்களே தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுத்த பாட்டைக்காணோம். நான் நடத்துநரிடம் (ஓட்டுனரை விட நடத்துனர் மூத்தவர் என்பதால்) சார் பக்கத்தில துவறங்குறிச்சிய விட்டா பெரிய ஊர் எதுவும் கிடையாது, வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தான் துவறங்குறிசியிலிருந்து வந்து இருக்கோம். அதுனால இந்த குழந்தைய எதாவது ஒரு மருத்துவமனயில சேர்த்திடலாம் வண்டிய திருப்பச் சொல்லுங்க என்றேன்.

இல்ல இல்ல நாங்க அவசரமா போய்கொண்டிருக்கிறோம் அதுனால துவரங்குறிச்சி நோக்கி செல்லும் பேருந்து எதிர் திசையில் வருகிறதா வென்று பார்த்து அந்தப் பெண்ணை ஏறிப்போகச் சொல்லுங்க என்று பெரும்பாலனவர்களிடமிருந்து பதில் வந்தது. அப்பொழுது அந்தப் பெண் (அதிகம் படித்த பெண் இல்லை என்று அவருடைய பேச்சிலே தெரிந்தது) நடந்து கொண்டவிதம் என்னையும், என் நண்பனையும் இன்னும் சிலரை கலங்க வைத்தது. கையில் பத்து ரூபாய் தவிர வேறு பணம் எதும் இல்லை யாராவது கொஞ்சம் பணம் கொடுத்து உதவுங்கள் என்று வெடித்து அழுதார்.

அதற்குள் ஓட்டுநர் எதிர் திசையில் துவறங்குறிச்சி செல்லும் பேருந்து வருது இறங்கிப் போய் ஏறுமான்னு சொல்லி அந்தப்பெண்ணை இறக்கிவிட அந்தப் பெண் மலங்க மலங்க விழித்துக்கொண்டு பைத்தியம் பிடித்தவர் போல அந்த வண்டி நோக்கிப் போகையில் யாராவது வந்து உதவ மாட்டார்களா என்பது அவரது பார்வையிலும், அழுகையிலும் தெரிந்தது. அந்தப் பார்வை என்னையும் என் நண்பனையும் அழுத்த நாங்கள் இருவரும் ஒடிச் சென்று அந்தப் பெண்ணோடு ஏறிக்கொண்டோம், எங்களோடு திருச்சி நோக்கிப் பயனித்தவர்கள் தம்பி நீங்க வாங்க வண்டி உங்களுக்காக நீங்க திரும்புகிறவரை இங்க நிக்காது என்று சொல்லி அழைத்தார்கள்.

நாங்கள் வரவில்லை நீங்கள் செல்லுங்கள் என்று கூறி அந்தப் பெண்ணோடு புறப்பட்டோம். எங்களுக்கும் அந்தப் பெண்ணிற்கும் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு அந்தப் பெண்ணை அமைதிப்படுத்த முயற்சித்தோம். அழுகையும் புழம்பலும் நின்ற பாடில்லை. ஒட்டுநர் வண்டியை விரைவாகச் செலுத்தி துவறங்குறிச்சியில் இறக்கி விட்டார். அங்கிருந்து ஆட்டோ பிடித்து மருத்துவமனை சென்றடைந்தோம். விவரம் தெரிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் வாடகை வாங்க மறுத்தார்(நல்லவர்). குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தையை அட்மிட் செய்துவிடும்படி கூற, என் நண்பன் சிறிதும் யோசிக்காமல் ஒரு ஐநூறு ரூபாய் பணம் (கல்லூரிக்கு செலுத்த வேண்டிய தொகை அது) எடுத்து அந்தப் பெண்ணிற்காக கவுண்டரில் பணம் கட்டச் சென்றான்.

நான் அந்தப் பெண்ணின் திருச்சி வீட்டு முகவரி வாங்கி கொண்டு அவர்கள் வீட்டில் தகவல் சேர்த்து விடுவதாக சொல்லி நானும் என் நண்பனும் கிளம்பினோம்.

திருச்சியில் எங்கள் கல்லூரிக்கு அருகாமையிலேயே அவர்கள் வீடு இருந்ததால் அவர்களிடம் விவரத்தை சொல்லி கல்லூரிகுச் சென்றோம். அவர்களும் எங்களது பெயர் கல்லூரி மற்றும் வீட்டு முகவரி வாங்கிக் கொண்டு அவசரமாக கிளம்பினார்கள்.

மறுநாள் காலை என்னையும் என் நண்பனையும் சிலர் பார்க்க வந்திருப்பதாக பிரின்சிபால் அறையிலிருந்து அழைப்பு வந்தது. அதற்குள் பிரின்சிபால் அவர்களை அழைத்துக்கொண்டு எங்களைத்தேடி வகுப்பறைக்கே வந்து விட்டார். வந்தவர்கள் அந்தப் பெண்ணும் அவரது கணவரும், எங்களைப் பார்த்ததும் கட்டி அழுது சொன்னார்கள் நீங்க இல்லைனா எங்க புள்ள பிழைச்சிருக்காது,எங்களை பொறுத்தவரை நீங்க தான் தம்பி தெய்வம்னு என் நண்பனை அந்தப்பெண் சொன்ன பொது. தொண்டை கணத்து அனைவருக்கும்.

இது ஒருபுறம் இருக்க, அந்த வாரம் விடுப்பில் ஊர் திரும்ப திருச்சியில் பேருந்து எடுத்தோம். பார்த்தால் எங்களையும் அந்தப் பெண்ணையும் நடுவழியில் விட்டுச் சென்ற அதே பேருந்து, ஓட்டுனரும், நடத்துனரும் அவர்களேதான். எங்களை அடையாளம் கண்டு நடத்துநர் கேட்டார் அந்தப் புள்ள பிழச்சிருச்சானு. நாங்கள் ஆமாம் என்றோம்.

அதற்கு அவர் சொன்ன வார்த்தை தான் எங்களை ரொம்ப மணம் நோக வைத்தது. நாங்க தான் சொன்னோம்ல அதுக்கு ஒன்னுமில்லை பிழைசுக்கிடும்னு, நீங்க தான் வயசுக்கோளாறுல அந்தப் பொம்பளப்புள்ளயப் பார்த்ததும் படத்துல் வற்ற ஹீரோ மாதிரி இறங்கிப்போனீங்க என்றார்.

சரி சரி வண்டிகிளம்பும்போது ஏறிக்கிங்க மதுரை மட்டும் தான் சிட்டிங் மத்த ஊரல்லாம் வண்டி கிளம்பும்போது இடம் இருந்தா மட்டும் தான் உட்காரலம்னு சொல்லிக்கொண்டு போனார்.

எப்படி பட்ட உலகத்தில் இருகிறோம் என்று புரிந்தது எங்களுக்கு. கருணையோடு நடந்தால் கூட அதையும் கொச்சைப்படுத்த இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள் என்று.

கோவில் சடங்குகளும், சில சங்கடங்களும்.



எங்க ஊர் எல்லையில் எங்க சாதி அமைப்பு வழிபாட்டு முறைக்காக கட்டப்பட்டது தான்(பெயர் குறிப்பிட விருப்பம் இல்லை) அய்யனார் கோவில். (எங்கள் சாதி மட்டுமல்லாது எங்கள் சாமியை குலதெய்வமாக வழிபடும் மற்ற சாதிப்பிரிவினரும் வந்து வழிபடுவதற்காக கட்டப்பட்டது)


பிறகு ஊர்க்காரர்கள் (எங்கள் சாதி அமைப்பினர் மட்டும்) அந்தக் கோவில் பராமரிப்புக்காகவும், சாமிக்கு பூசைகள் தொடர்ந்து செய்வதற்காகவும் சில சட்டங்களை ஏற்படுத்தினர். அதாவது அந்தக் கோவிலுக்கு அதிக நிதி கொடுத்தவருக்கு, கோவிலில் வரும் வருமானத்திலிருந்து (உண்டியலில் சேரும் தொகை தவிர்த்து) எங்கள் ஊரில் (எங்கள் சாதி அமைப்பினர் மட்டும்)எத்தனை தலைக்கட்டு இருக்கிறதோ அத்தனை பங்காகப் பிரித்து அதில் ஒரு குறிப்பிட்ட அளவு பங்கை, நிதி அதிகமாக கொடுத்த குடும்பத்திற்கு குடுத்து விடுவது என்றும், அந்தக் குடும்ப உறுப்பினர்களே அதிகப்படியான நாட்களில் சாமிக்கு பூசை (கோவில் முறை) வைப்பது என்றும் வகுத்துக் கொண்டார்கள்.


மற்ற குடும்பத்தார்கள் பிரிதொறு நாட்களில் சாமிக்கு பூசை(கோவில் முறை) வைப்பது வழக்கம். இது நடப்புத் தலைமுறைக்கு முந்தைய தலைமுறைவரை சரிவர அந்த அந்த காலகட்டங்களில் ஒவ்வொரு வீட்டாரும் அவரவர் முறை வருகிற பொழுதும் தவறாமல் கடைபிடித்தனர். காரணம் போன தலைமுறைவரை எங்கள் ஊரில் யாரும் ஒரு பள்ளிப் படிப்புகூட படிக்கவில்லை என்பதால் ஊரில் உள்ள சொந்த மற்றும் கோவிலிக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தினர். மேலும் போன தலைமுறைகள் வரை ஒரு வீட்டிற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று அண்ணன் தம்பிகள் இருந்தனர். அதனால் கோவில் முறை வருகிறபோது குடும்பத்தில் ஆண்கள் யாராவது ஒருத்தர்(மற்றவர்கள் வேலை நிமித்தமாக வெளியூர்களில் சென்று இருந்தால் ) அந்த வேலையை (சாமிக்கு செய்யும் பூசையை) செய்து விடுவார்கள்.


ஆனால் இன்றைக்கு வீட்டிற்கு ஒரு பிள்ளை என்று வந்து விட்டது. மேலும் படிப்பறிவு வளர்ந்து விட்டதாலும் விவசாயத்தில் ஆதாயம் குறைந்து விட்ட நிலையிலும், வருமானத்திற்காகவும், வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும், வேலையின் காரணமாக வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் நிலைக்கு பெரும்பாலான குடும்பங்கள் தள்ளப்பட்டு விட்டனர். இதனால் அவர்கள் சாமிக்கு பூசை வைக்கும் முறை வருகிறபோது செய்வதறியாது தவிக்கின்றனர்.



சாமிக்கு செய்யவேண்டியதை செய்யவில்லை என்றால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் கடவுள் தண்டனை கொடுத்து விடுவார் என்கின்ற பயம் ஒருபக்கம் இருக்க, அதை விட ஊராரின் மிரட்டல்களுக்குதான் அதிகம் பயப்பட வேண்டியிருக்கிறது. அதாவது கோவில் முறை வைக்க தவறினாலோ அல்லது வைக்க நாங்கள் விரும்பவில்லை என்று ஒதுங்கினாலோ, சொந்த ஊருக்கும் உங்களுக்கும் இனி எந்த (சம்)பந்தமும் இல்லை என்று எழுதிகுடுத்து விடவேண்டும் என்று ஊரில் ஒரு சட்டம் இருக்கிறதுக்குப் பயந்து, இன்னைக்கு இருக்கும் அவசர யுகத்தில் தனக்கு என்னைக்கு சாமிக்கு பூசை வைக்கும் முறை வரும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அந்த நாட்களில் ஊரில் இருக்கும் வசதி குறைந்த பங்காளி குடும்பங்களுக்கு அதிகத்தொகை கொடுத்து சாமிப் பூசைகளை செய்வதென்பது அந்தக் குடும்பங்களுக்கு பெரிய சிரமமாக உள்ளது.



வெளிநாடு அல்லது வெளியூர்களில் இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட சடங்குகள் சிரமத்தை குடுக்கிறது. அதனால் சாமிக்கு பூசை வைக்கும் முறையை யாராவது ஒருவரிடம் மாதச் சம்பளமாக அவர் கேட்கும் தொகையை குடுத்துப் பார்க்கச் சொல்லலாம், என்றால் கோவிலில் கிடைக்கும் பெரிய வருமானத்தை வைத்திருக்கும் குடும்பங்கள் இதை ஒத்துக்கொள்வதில்லை. ஆகையால் இந்தச் சிரமங்கள் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் எங்க ஊர் (சாதி)காரர்களுக்கு இன்றளவும் சிரமமாகத்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்து: காலம்காலமாக கடவுளை நம்பவில்லையென்றாலோ அல்லது கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பேசினாலோ, நரகத்திற்குப் போவார்கள் என்று சொல்லிச் சொல்லி மனிதனை பயமுறுத்தி வந்ததால் இன்றளவும் மனிதன் கடவுள் நம்பிக்கை சரிதானா? சடங்குகள் சரிதானா? என்பதை ஆராய்வதற்குக்கூட பயப்படுமளவுக்கு அவன் மனதில் கடவுள் பற்றிய பயம் மேலோங்கிவிட்டது.

மேலும் கோவில்கள், கடவுள்கள் என்பது மனிதனை பதுகாப்பதற்காக (வெறும் நம்பிக்கை அளவிலே) உருவாக்கப்பட்டதே. தவிர மனிதன் கடவுளை காப்பதாகவோ, கடவுள் நம்பிக்கை மனிதனை முடக்குவதாக இருக்கக் கூடாது என்பது என் எண்ணம்.



மனித நேயமும் ஆத்திகனும்



கால்கள் கட்டப்பட்டு, கழுத்து வளைக்கப்பட்ட ஆடு , ஐயோ என்னை விட்டுடுங்கடா என்பது போல் ஈனசுரத்தில் கத்திக் கொண்டே சுற்றி இருந்தவர்களைப் பார்க்க, சுற்றி இருந்த கூட்டமோ பயபக்தியோட பூசாரியை பார்க்க, கெடாக்கொம்பு போல மீசை வைச்சிருக்கும் பூசாரி அந்த ஆட்டின் கழுத்தை கரகரவென அறுக்க, ஆட்டின் சத்தமும், இரத்தமும் கண்கள் மேலே சொருக சிறிது சிறிதாக அடங்கியது.



ஒரே வீச்சில் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு ஓடி விழுந்த சேவலின் இரத்தமும், ஆட்டின் இரத்தமும் மண் சட்டியில் கொண்டுவரப்பட்டது. அதை பூசாரி ஒரே மூச்சில் குடித்து முடித்து கூட்டத்துக்கு அருளாசி வழங்கினார்.


பிறகு வெட்டப்பட்ட நான்கறிவு, ஐந்தறிவு ஜீவன்கள் சமைத்து சாமிக்கு படைக்கப்பட்டது. அப்போது அந்தக் கூட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒருவரின் கைபேசியில், மரண தண்டனை என்ற பெயரில் அரேபியாவில் தலை துண்டிக்கப்படும் நிகழ்ச்சி பலர் முன்னிலையில் நடப்பதை பார்த்த எல்லோரும், இது என்ன காட்டுமிராண்டித்தனமா இருக்கு, கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாம வேடிக்கை வேற பார்க்குறாங்கன்னு கூட்டம் பேசிக்கொண்டிருந்தது.


அப்போது அங்கே இருந்த ஒருத்தர் கேட்டார், நீங்கள் செய்ததற்கும், அரேபியாவில் நடப்பதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை, இங்கே ஆடு அங்கே மனிதன் எல்லம் உயிர் தான் என்றார். ஆட்டையும், சேவலையும் கொல்லும் போது வராத மனித நேயம், இப்போ மட்டும் எப்படி வந்தது? என்றார்.


உடனே பூசாரி ”இது சாமி சமாச்சாரம் என்றும், இவன் இங்க வந்து நாத்திகம் பேசுறான், நம்ம சடங்கு சம்பிரதாயங்கள கிண்டல் பண்ணுறான், இவன துறத்துங்கடான்னார்.


” முடியை மழித்தால் வளராது என்றால் உங்க சாமிக்கு உங்க மசிரக்கூட குடுக்க மாட்டிங்கடான்னு முணுமுணுத்துக் கொண்டே போனார் அந்த நபர்.


மக்களின் அறிவைக் கிளறிவிட்டு அவர்களுக்கு அறிவுச்சுதந்திரத்தை உண்டாக்க நினைக்க இங்கே கேள்வி கேட்பவன் நாத்திகன், எதையும் ஆராயாமல், மத, சாத்திர, புராணங்கள் போன்ற சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்து கேள்வி கேட்கவிடாமல் மக்களை அப்படியே மடமையிலையே வைத்து இருக்க நினைப்பவன் அல்லது தடைபோடுபவன் ஆத்திகன் என்றால், நாத்திகன் மேலானவன் என்பது என் எண்ணம்.

அவளும் நானும்





(வார்த்தை கடனாகபெற
விருப்பமில்லை
மூளை செலவு செய்ததில்
கிடைத்த துளிகள் கொண்டு
ஒரு கோப்பை
நிறைக்க முயற்சிக்கிறேன்)

அதுவரை அவளிடம் நானும்
என்னிடம் அவளும் பழகியதில்லை
அவளை அறிந்து கொள்ள
முயன்ற போதெல்லாம்
என்னை அறிந்தவள்
போல் இருந்தாள்

அவளிடம் பேச முயன்ற போதெல்லாம்
அவள் என்னிடம் பேசிவிட்டதுபோல் இருந்தால்
நான் ஆரம்பிப்பது போலதோன்ற
அவள் முடிந்தது போல இருந்தாள்
அருகருகே இருக்கிறாம்
ஆரம்பம் முடிவாக

கருத்துக்கள் அடிப்படையில் வரும் உறவு எப்படிப்பட்டது

கருத்தின் அடிப்படையில் நாம் மற்றவர்களுடன் உறவை உருவாக்கிக்கொள்ளும் போது, அங்கு உறவைவிட கருத்தை நிறைவேற்றுவதுதான் முக்கியமானதாகப் போய்விடுகிறது.

தெரிந்தவற்றின்(known) அடிப்படையில்தான் நம் மனம் இயங்கி வருகிறது. மனம் தனக்குத் தெரிந்தவற்றிலிருந்து கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறது. கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது அங்கு மனம் முக்கியமான பங்கை வகிக்க ஆரம்பிக்கிறது.

கருத்துக்களை எப்படி நிறைவேற்றுவது என்ற வழிமுறைகளைக் கண்டுபிடித்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் நம் மனம் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறது. அப்போது உறவு புறக்கனிக்கப்படுகிறது.

நான் இந்து, நான் இந்தியன், நான் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவன் போன்றவைகள் நமக்கு நன்கு தெரிந்தவைகள். மதம், நாடு, கட்சி ஆகியவர்றை பற்றி பல ஆழமான கருத்துக்களை இவைகள் உண்டாக்கிவிடுகின்றன. இந்தக் கருத்துக்களின் காரணமாக நாம் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடமும், வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களிடமும், வேறு அரசியல் சித்தாந்தங்களைப் பின்பற்றி வருபவர்களிடமும் நாம் உறவு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. மாறாக அவர்களை நாம் விரோதிகளாகவே பார்க்கிறோம். அவர்களை அழிக்க முற்படுகிறோம்.

நமக்குத் தெரிந்தவைகள் நம்மை முற்றிலும் கட்டுப்படுத்தி, நம்மை தவறான வழிகளில் இட்டுச் செல்கின்றன.தெரிந்தவற்றின் அடிப்படையில் இயங்கிவரும் மனம், பாதுகாப்பு,, இன்பம், புகழ், ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றை விரும்பி அவற்றை அடையும் முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது.

கருத்துக்களின் அடிப்படையில் உருவாகும் உறவு போட்டி, பகை, சண்டைகள், பிரிவினை, பொறாமை போன்றவற்றை தான் உருவாக்கும்.