மனிதனை நினை மதங்களை மற

வண்டியிழுக்கும் எருது, அதிகச் சுமை வண்டியில் ஏற்றப்படும் பொழுது வாயில் நுறைதள்ள, மூச்சிறைக்க, கண்ணீர் வழிய திணறி இழுக்குமே தவிர தனக்கு ஏன் வலிக்கிறது, நான் ஏன் இச்சிரமத்துக்கு ஆளானேன் என்று சிந்திக்காது. காரணம் இயற்கை அதன் தன்மையை அப்படி நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது.

ஆனால் சிந்திக்கும் திறன் கொண்ட மனிதன், தனக்கு வரும் துன்பங்களை ஆராய்ந்து அதில் இருந்து விடுபட அல்லது அதன் காரணங்களையாவது தெரிந்து கொள்ளமுடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் சிந்திக்க மறுத்தோ, அவகாசம் இல்லாமையாலோ அந்தப் பொறுப்பை வேறொரு இடத்தில் ஒப்படைக்க நினைப்பதும், அந்தப் பொறுப்பை ஏற்பவர் கடவுள் என்று நம்புவதும் நகைப்புக்கு இடமளிக்கிறது.

இறை என்ற ஒன்றை நம்புகின்ற பொழுது நேரடிப் பலன் கிடைக்கிறதோ இல்லையோ, உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே அது இருக்கும். வருகிற துன்பம் எத்தகையதாயினும் அதை நீங்களே அனுபவம் செய்கிறீர்கள். இதில் கடவுள் பங்கு என்று எதைச் சொல்வது.

துன்பம் வருகிற போதுதான் கடவுளையே நீங்கள் அறிந்து கொள்ள முடியும் (குந்தி மஹாபாரதத்தில் கண்ணனிடம் சொன்னது, மேலும் துன்பங்களைத் தந்து எப்பொழுதும் கண்ணனையே நினைக்கும்படி வரம் தரும்படியும் கண்ணனைக் கேட்டதாகக் கதை சொல்கிறது) என்ற வாசகத்தைப் படிக்கிற போது எனக்குச் சிரிப்புத் தான் வரும். துன்பத்தைக் கொடுத்துத் தான் தன் இருப்பை நிரூபிக்கும் இறைவனை விட நான் இவ்வுலகத்தின் அணைத்து இன்பத்தையும் தருகிறேன் என்னைப் பணிவாயா என இயேசுவைக் கேட்ட சாத்தான் இறைவனை விட மேலானது என்று நான் நினைக்கிறேன்.

நீ எங்கள் கடவுளை மறுக்கிறாய், நிந்திக்கிறாய் என்கிறீர்களா? நான் அப்படி ஒன்று இருக்கிறதா இல்லையா என்று தெரியாதவன். நான் கேள்விகேட்டாள் நான் நிந்திக்கிறேன் என்று எடுத்துக் கொள்வீர்களா?

நீங்கள் இறையை ஏற்பவர்கள்தானே? உங்கள் கடவுள் உங்களை சோதிக்கிற போது, அதை ஏன் அப்படியே அது அவன் செயல் என்று ஏற்க மறுக்கிறீர்கள். உதாரணமாக உங்களுக்கு நோய் வந்தால் அதுவும் இறைவன் செயல்தானே, அதை அப்படியே அதன் போக்கில் விட்டு விடாமல் அதற்கு எதிராக செயலாற்றி உங்களை அந்த நோயில் இருந்து விடுபட முயற்சிப்பதென்பது, நீங்கள் கடவுளின் செயலை எதிர்க்கிறீர்கள் அல்லது கடவுள் இல்லை என்று எதிர்வினையாற்றி நிரூபிக்கிறீர்கள்.

இது நீங்கள் இயற்கையையும் இறைவனையும் ஒன்றாக நினைப்பதன் விளைவே. இயற்கையும் இறைவனும் ஒன்றாக இருக்கவே முடியாது. இயற்கை இறைவனுக்கு கட்டுப்பட்டதாக நான் நினைக்கவில்லை, மாறாக நீங்கள் குறிப்பிடும் இறைவனானவர் இயற்கைக்கு கட்டுப்பட்டவராகவே இருக்க முடியும். வேண்டுமென்றால் இப்படி வைத்துக்கொள்ளலாம், இயற்கையும் இறைவனும் அவனே, கடவுளும் சாத்தானும் அவனே, ஆழிலைக் கண்ணனும் அரக்கனும் அவனே என்று ஏற்றுக் கொள்கிறபோது, எது நடந்தாலும் அது அவன் செயல் என்று திருப்திப் பட்டுக்கொள்ளலாம்.

ஆனால் அப்படி ஏற்கிறபோது அனைத்து மதங்களும் கட்டமைத்து வைத்திருக்கும் இறைவன் மிகவும் நல்லவன் என்ற நம்பிக்கையில் பாதிப்புவரும்.காரணம் துன்பத்தில் இருந்து விடுதலை அழிப்பவரே தேவைப்பட்டால் இயற்கை சீற்றங்களின் மூலியமாக பலரை கொல்லுவார் என்றும் ஏற்கிறபோது அது மதங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் கடவுள் பெயருக்கு இழுக்குத்தானே.

இங்கே பிரச்சினையே மதங்கள் ஏற்படுத்தி இருக்கும் கடவுள் கோட்பாடுகளே காரணமென நினைக்கிறேன். நடக்கின்ற நல்லதுக்கெல்லாம் கடவுளின் செயலென்றும் கெட்டதுக்கெல்லாம் சாத்தான் என்றும் கிறித்துவ மதம் சொல்கிறது. கர்த்தரே உலகைப் படைத்தார் என்று வைத்துக் கொண்டாலும் சாத்தானையும் சேர்த்தே படைத்தாரா? இல்லை சாத்தானும் கடவுள் போல் தான் தோன்றியா என்ற கேள்வி எழவே செய்கிறது.

முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப தண்டனையும் பலனையும் தருபவர் ஏதோ ஒரு இந்துக் கடவுள் என்றால், பாவமும் புண்ணியமும் மனிதர்கள் செய்கிற போது அவர்களை படைத்த படைப்பாளியான கடவுளுக்குத் தானே பலனும், தண்டனையும் போய்ச் சேரவேண்டும்?.

அதை விடுத்து இது கலிகாலம், மனிதர்கள் பாவம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் அவர்களை அழித்து மீண்டும் உலகத்தை படைக்கப் போகிறார் என்றும், பைபிளில் கூறப்பட்டுள்ள படி கர்த்தரே உலகையும் அதில் மனிதர்களையும் படைத்து பிறகு மாமிசமான மனிதன் தவறு செய்ய ஆரம்பித்து விட்டதால் அவர்களை அழித்து மீண்டும் ஒரு உலகைப் படைத்தார் என்பதையும் ஏற்பதற்கில்லை. ஏனெனில் இதில் அடிப்படையாக பார்த்தால் படைப்பே தவறாக இருப்பதால் தானே மனிதர்கள் தவறு செய்ய நேரிடுகிறது. இது தன்னால் நிகழ்ந்த தவறு தானே என்ற உணரக்கூடிய பொது அறிவுகூட இல்லாதவரா உங்கள் கடவுள் என்று கேட்கத்தோன்றுகிறது.

ஈராயிறத்துப் பணிரெண்டில் உலகம் அழியும் என சொல்லி வருகிறார்கள். பைபிள்படி நல்லவர்களான நோவாவும் அவர் குடும்பத்தினரையும் தவிர்த்து மற்ற எல்லோரையும் கர்த்தர் அழித்துவிட்டார் என்றே வைத்துக் கொண்டால், இன்றைக்கு இருக்கும் உலக மக்கள் அனைவரும் நல்லவர்களான நோவா குடும்பத்தவர்களே என்கிற போது எல்லோரும் தவறு செய்ய நேரிட்டது எப்படி?

நம்புங்கள் நடக்கும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்கின்ற கடவுள் கோட்பாடுகளை சந்தேகமாகக் கேள்வி கேட்டாள் நான் நாத்திகனாம். முதலில் அதைச் சொல்ல (மதவாதி) உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது. இஸ்லாத்தில் எல்லாம் வல்ல இறைவனே (அல்லா) உலகைப் படைத்தார் என்கிறது, கிறிஸ்துவர்களுக்கு கர்த்தரே உலகைப் படைத்தார், நீங்கள் கிறிஸ்துவாகப் பிறப்பதற்கும், இஸ்லாமியராகப் பிறப்பதற்கும் ஏற்கனவே இந்துக் கடவுள் விதி எழுதிவிட்டார் என்கிறது இந்து மதம்.

இதில் எந்த மதத்தினரும் அடுத்த மதத்தினரின் கடவுள் கொள்கைகளையோ கட்டமைப்புகளையோ ஏற்க மாட்டார்கள். ஆக கோவியார் சொன்னது போல் ஒவ்வொரு மதத்தினரும் அடுத்த மதத்தினருக்கு அவர்கள் கடவுள் பெயராலும் கட்டமைப்பாளும் நாத்த்கரே.

வெறும் தன்னலம் கருதியே பக்தியாளர்களாக இருந்து கொண்டு தங்களை ஆண்மீகவாதிகள் என்றும் ஆண்மீகம் பேசுபவர்கள் என்போர் அவர்களை அவர்களே சீர்தூக்கிப்பார்த்துக் கொள்வது நல்லது. இறை அச்சம் அல்லது சொர்கம் பற்றிய கணவில் நல்லவர்களாக இருப்பவர்களைவிட இப்படிப்பட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கு எதல்லாம் துன்பமோ அதை மற்றவர்களுக்குச் செய்யாமலும் கடவுள், மத, சாதி பேரைச் சொல்லி சக மனிதனிடம் ஏற்றத் தாழ்வு பாராட்டாமல் கடவுளை மற மனிதனை நினை என்று வலியுறுத்தும் நாத்திகனே ஆத்திகனைவிட மேலானவன்.

எத்தனை எத்தனை மதங்களடா?

அதில் எத்தனை எத்தனை கடவுளடா?

எத்தனை எத்தனை கொள்கைகளடா?

அனைத்திலும் அடிப்படைக் கொள்கை என்றாலோ

அடுத்த மதத்தினரை அழிப்பதுதானோடா?

(இல்லாத) கடவுளே உங்களைக் கேட்பதெல்லாம் இதுதான், இனி ஒரு அவதாரம் வேண்டாம், இன்னுமொறு மதத்தை பூமி தாங்காது.

தாலி புனிதமா?


திருமணங்களை திருவிழாவாக நடத்துவது என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. திருமணத்தின் நோக்கம் சந்ததிகளை உருவாக்குவதுதான் என்று சொன்னாலும், அதன் மற்றொரு நோக்கம், காமம் என்னும் தீய உணைர்வை முறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதே.


இல்லற வாழ்க்கையில் இனையும் ஓர் ஆணையும் பெண்னையும் இனைக்கும் ஒரு பாலமாக இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தாலியும், கிறிஸ்த்துவர்களுக்கு மோதிரமும் விளங்குகிறது . தாலியோ மோதிரமோ அது ஒரு பெண் திருமணமானவள் என்பதை குறிக்கும் ஒரு அடையாளச்சின்னமே. இந்துத் திருமணங்களில் தாலி கட்டுவது என்பது ஆணாதிக்கத்தையே காட்டுகிறது. ஏனெனில் இந்துத் திருமணங்களில் ஆண், பெண் இருவருக்கும் திருமணம் ஆனதற்கான தனித்தனியான அடையாளச்சின்னங்கள் அணியப்பட்டாலும், பெண் மட்டுமே அதை அவளோ / அவள் கணவனோ இறக்கும் வரை தாங்கிப்பிடிக்க வேண்டும் என்பது நிர்பந்தம். ஆணுக்கு அப்படி எந்த நிர்பந்தமும் இல்லை என்கிறபோது இதை ஆணாதிக்கம் என்று கூறாமல் வேறென்னவென்பது.


தனக்கு எதிரே வரும் பெண் திருமணமானவள் மாற்றான் மனைவி தவறான எண்ணத்தில் பார்க்கக் கூடாது என்பதை அவளை பார்க்கும் ஆண் தெரிந்து கொள்ளவே பெண்ணிற்கு தாலி அணியப்படுகிறது என்று பெரும்பாலானவர் கூறுவர். இங்கே ஒரு விடயம் தெள்ளத் தெளிவாகிறது, எந்த ஒரு ஆணும் தனக்குப் பிடித்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க முடியும், எந்த ஒரு பெண்ணையும் பார்த்து இவள் திருமணமானவளா இல்லையா என்பதை தெரிந்து கொண்டு தன் விருப்பத்தை அந்தப் பெண்ணிடமோ அவளைச் சார்ந்தவர்களிடமோ தெரியப்படுத்தும் உரிமை இருக்கிறது என்பது நிதர்சனம்.

ஆனால் அதே உரிமை பெண்ணிற்கு மறுக்கப்படவே செய்கிறது, காரணம் ஆண் வர்கம் கலாச்சாரம், பெண்ணீயம் என்று பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தி இருக்கும் கட்டமைப்புகளே.


சரி விடயத்துக்கு வருவோம். தாலி புனிதமானதா?


தாலிகட்டுவதாலே கணவனும் மனைவியும் காலம் காலமாக சேர்ந்து வாழ்கிறார்களா என்றால் என்னைப் பொறுத்து இல்லை என்றே சொல்வேன்.

திருமண பந்தம் நீடிப்பதென்பது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் போன்ற நற்பண்புகளைப் பொறுத்து அமைவது. இதுலே தாலிக்கு எப்படி புனிதம் வந்தது என்றே தெரியவில்லை. பெண்கள் தாலிக்கு பெருமரியாதை தருவதெல்லாம் ஆண் வர்கம் பெண்கள் பற்றி கட்டமைத்து வைத்திருக்கும் கட்டுமானங்களே. எப்படிப்பட்ட கணவனாக இருந்தாலும் அவனை மனைவியானவள் மதித்து / உயர்வாக நினைத்து நடக்க வேண்டும் என்று தாலிக்கு புனிதம் கற்பித்து இருக்கக்கூடும்.


இன்றையச் சூழலிலும் பெண்களுக்கு தாலி கட்டுவது வழக்கமாகவே இருந்து வந்தாலும், படித்த பெண்கள் தாலிக்கு அவ்வளவு முக்கியயத்துவம் கொடுப்பதில்லை. தாலி புனிதம் என்றால் அதை பிறர் பார்க்கும் படி வெளியில் தெரியுமாறு அணிவதில்லை, மாறாக மறைக்கவே விரும்புகின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்கள் தாங்கள் அணியும் உடைக்கு தாலி பொறுத்தமில்லாமல் இருப்பதாக எண்ணி அதை கழட்டி வைக்கும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள்.


எந்தக் காரணத்தினாலோ, தாலியை கழட்டி விட்டால் தன் கணவருக்கு ஆபத்து நேரிடும் என்று சில பெண்கள் மூடத்தனம் கொண்டிருப்பதெல்லாம் தாலி பற்றிய வீன் பெருமைகளையும், புனித்தன்மை கொண்டது என்று சடங்கு சம்பிரதாயங்களில் வாழ்க்கை நடத்தும் ஒரு குறிப்பிட்ட வர்கத்தினரால் பரப்பி விடப்பட்ட புழுகுகளே காரணம்.


பழங்காலத்தில் பதிவுத் திருமணங்கள் அரசமமைப்புச் சட்டங்களில் (மன்னர் காலத்து) இல்லாததால் (ஆண் சமூகம் பெண்னை அடக்கி வைக்க நினைத்த மற்றொரு காரனத்தினாலும்) தாங்கள் திருமணமானவர்கள் என்பதை அவர்கள் சார்ந்த சமூகம் தெரிந்து கொள்ள அணியப்பட்ட இரு அடையாளச் சின்னங்களே தாலி மற்றும் மிஞ்சி.


என்னைப் பொறுத்த வரையில் இன்னும் நூறு ஆண்டுகளில் திருமணம் என்கின்ற அமைப்பு வெறும் பதிவுத்திருமணங்களாகவே இருக்கும். எதிர்கால விரைவு வாழ்க்கையில் யாருக்கும் இன்றைக்கு இருக்கும் நேர அவகாசமோ, சொந்த பந்தங்களில் பினைப்போ இருப்பதற்கு வாய்ப்புகள் குரைவாகவே இருக்கும். அப்படிப்பட்ட சூழல் அமைகிற போது திருமணம் என்பது வெறும் கடமையாக மட்டுமே இருக்கும்.


போன நூற்றாண்டுகளில் திருமணங்கள் மாதக் கணக்கிலும், பிறகு வாரக்கணக்கிலுமாக மாறி இந்த நூற்றாண்டில் ஒரு சிலமணி நேரங்களுக்குள் சுருங்கி விட்டது. அடுத்த நூற்றாண்டில் பதிவுத் திருமணங்கள் கூட அரசாங்கத்தின் கட்டாயத்தால் ஒரு கடமையாகவே நடக்கும் சாத்தியம் உள்ளது.


*******


திருமணங்களை நடத்தி வைக்கும் பிராமனர்கள், சிவாச்சாரிகள் கூட பழைய முறைப்படி தான் திருமணங்கள் நடத்தப்பட வேண்டும், இல்லை என்றால் நாங்கள் அத்தகைய திருமணங்களை நடத்தி வைக்க மாட்டோம் என்று சொல்லுவதில்லை. காரணம் சடங்குகளையும் அதில் கூறப்படும் புனிதங்களையும் யாரும் ஏற்பதற்கில்லை என்பதை தெரிந்து வைத்திருப்பதாலும், யார் எப்படிப் போனாலும் தனக்கு ஜீவனம் நடத்த வருமானம் கிடைப்பதாலும் இவர்கள் பழைய முறப்படி திருமணங்கள் நடத்த வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை.


பெரும்பாலான சாதியினர் சடங்குகளை, எங்கள் முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள் நாங்களும் கடைப்பிடிக்கிறோம் என்பார்கள். மற்றொரு காரணம் சடங்குகளைப் பழித்தால் பாவம் வந்து சேரும் என்று சடங்குகளுக்கு புனிதம் கற்பிக்கப்பட்டிருப்பதுமே காரணம். இப்படித்தான் சடங்குகளின் வழி தாலிக்கும் புனிதம் கற்பிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அதைத் தவிர்த்து தாலி புனிதம் என்பதெல்லாம் வெறும் புரட்டுகளே. அடிப்படையாகப் பார்த்தால் தாலி பெண்ணிற்கு பதுகாப்பு என்பதை விட பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கத்தின் சூழ்ச்சி என்பது தான் உண்மை.