விடியாமூஞ்சி

அக்னி வெயில்,

இரக்கமில்லா காற்று,

மெளனத்திற்கு தலையசைக்க

விரும்பா மரங்கள்,

புற்கள் கூட முலைக்காத

புண்ணிய பூமியில்

கால் முலைத்த பூவாய்,

அந்தச் சிறுமி

தட்டுத் தடுமாறி

தண்ணீர் குடம் சுமப்பதை,

பார்ப்பவர்கள் கண்கள்

பனித்துவிடும் போது,

ஏனோ பாதகத்தி, சித்தி

மட்டும் சாடுவாள், ஏண்டி

விடியாமூஞ்சி ஒரு நடை

தண்ணிக்குப் போய்ட்டு வர

இவ்வளவு நேரமா?

ஆத்திகம், நாத்திகம் எது சிறந்தது?

கடவுள் என்ற சொல்லின் இருவேறு சிந்தனைகளைக் கொண்டவையே ஆத்திகம் மற்றும் நாத்திகம். இறை நம்பிக்கை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை வளர்த்துக் கொண்டு நிற்பது ஆத்திகம். புலனுக்கும், அறிவிற்கும் புலப்பட்டதில் மட்டும் நம்பிக்கை கொள் என்ற கொள்கையில் வளர்ந்தது நாத்திகம். ஆத்திகனின் கடவுள் நம்பிக்கை என்பது அவன் சார்ந்துள்ள மத நம்பிக்கையில் அவன் எவ்வளவு தூரம் ஈடுபாடு கொண்டுள்ளான் என்பதைப் பொறுத்தே அவனது கடவுள் நம்பிக்கை இருக்க முடியும்.(பெறும் பாலானவர்களுக்கு கடவுள் நம்பிக்கை என்பது அவர்கள் சார்ந்துள்ள மதத்தை பொறுத்தே இருக்கும், அதைத் தாண்டி கடவுள் பற்றிய சிந்தனை இருக்காது). நாத்திகருக்கு ஆத்திகர்களின் கடவுள் நம்பிக்கை, கொள்கைகளுக்கு எதிரான சிந்தனையாக இருக்கும்.

எல்லாம் அவன் செயல், அவனின்றி அனுவும் அசையாது என்று (அசையா) நம்பிக்கையில் நம்பிக்கை வைப்பதே ஆத்திகம். எல்லாம் இயற்கை என்பதாக நம்புவது நாத்திகம். இரண்டுமே நம்பிக்கை என்ற நிலை தாண்டி உண்டு இல்லை என்ற எந்த நிரூபனமும் தந்து விளக்குவதில்லை.(குறைந்த பட்சமாக மனிதனின் இயற்கை பற்றிய அச்சம், ஆச்சர்யத்திற்கு விடை கானும் முயற்சியில் அறிவியல் மட்டுமே முன்னேறி வருகிறது. இயற்கை அது சூழலால் பின்னப்பட்டதாக இருப்பதனால் அறிவியல் என்றைக்கும் இயற்கையை தன் கட்டுக்குள் கொண்டுவர இயலாது. நிலையாத்தன்மை என்பதே இயற்கை விதியாகும் பட்சத்தில் விஞ்ஞானமும் இயற்கை பற்றிய ஆராய்சியில் தன் தேடலை தொடர்ந்து கொண்டு தானிருக்கும் என்றைக்கும் ஒரு முழுமைக்கு வரவே வராது).

எப்படி, எல்லாம் அவன் செயல் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாதோ, அதைப் போலவே புலனுக்கும், அறிவிற்கும் புலப்படாத என்று ஒன்று இருக்க முடியாது என்பதும் ஏற்றுக் கொள்ளமுடியாததே. மனித மனத்துடன் தொடர்புடையவன் இறைவன் என்றும் அவனை மனதால் மட்டுமே உணர முடியும் என்பது ஆத்திக வாதம், எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் அப்படி ஒன்று இருக்கவே முடியாது என்பது நாத்திகவாதம்.( பொதுவாக நாத்திகத்தின் இறை எதிர்ப்பு அளவுகோள் எது என்று பார்த்தால் அது ஆத்திகர்களின் கடவுள் பற்றிய கட்டமைபின் அளவுகோளுக்கு நேர் எதிரானதாகவே இருக்கும். இறைவன் என்று யாரும் இல்லை என்று நம்பிவிட்ட பிறகு, அது பற்றிய எந்தச் சிந்தனையும் நாத்திக மனங்களில் வளர வாய்ப்பே இருக்காது. அதனாலேயே அவர்களது கடவுள் மறுப்பிற்கான அளவுகோள் ஆத்திகர்களின் அளவுகோள் எதுவோ அதன் எல்லையை தாண்டி நாத்திகர்களின் கடவுள் குறித்த அறிவு இருக்கவே முடியாது).

தேவைக்கு மிகுதியாக அனைத்து சுக, செளகரியங்கள் கிடைத்த போதும் அனுபவிக்கவிடாமல் மறைமுகமாக அதை தடுக்கும் விதமாக இவையெல்லாம் அற்ப சுகம், குடும்பம், உறவுகளில் இருக்கும் பினைப்புகளில் இருந்து விடுபட்டு இறைநிலையை அடைந்துவிடு அதுதான் நிலையான இன்பம் என்று சொல்லும் ஆத்திகத்தைவிட, வாழும் வாழ்க்கையே நிஜம் கிடைத்தவற்றை அனுபவித்து மரணம் வருகிறபோது அதை மகிழ்வுடன் வறவேற்கப் பழகிக்கொள் என்னும் நாத்திக சித்தாந்தம் மேலானதாகப் படுகிறது.

இறை நம்பிக்கையாளர்கள் (இறை அச்சம் காரணமாக) நல்லவர்களாக இருப்பார்கள் என்பது இறைநம்பிக்கையாளர்களின் நம்பிக்கையாகவே இருந்து வருவதென்பது என்னமோ உண்மைதான். ஆனால் ஒரு நாத்திகரின் பார்வையில் ஆத்திகர் என்பவர் சாதி/மத, ஏற்றத்தாழ்வு பாராட்டி மனிதனுக்குள் பிரிவினையை தூண்டுபவராகவே இருக்கிறார். அதே நாத்திகர் குறித்த ஆத்திகரின் பார்வையில் பிறரை நேசிக்கத் தெரியாதவர் என்பதாகவும், தாய்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் என்பதாகவே இருக்கிறது.

தன்னலம், தேவை என்று வருகிறபோது இறை நம்பிக்கை, கொள்கைகள் எல்லாம் சுத்தப் பொய் என்பதாக அவர்கள் சார்ந்துள்ள மத, கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயலாற்றி இறைவன் இருப்பை பொய்யென்று நிரூபிக்கும் (தேவநாதனைப்போல, நித்தியானந்தாவைப்போல) விதமாக நடந்து ஆத்திகர்களிலும் தரங்கெட்டவர்கள் உண்டு என்று நிரூபிப்பதும், எந்த ஒரு நிகழ்விற்கும் காரணகாரியமுண்டு, அதில் கடவுள் பங்கென்று எதுவுமில்லை என்ற நம்பிக்கை கொண்ட நாத்திககர், துன்பங்களில் துவண்டு அல்லது அதற்கான காரணத்தை அறிய முடியாத போது தனக்கும் மேலான சக்தி ஒன்று இருப்பதாக நினத்து தான் தாங்கிப் பிடித்த கொள்கைகளை தானே போட்டு உடைக்கும் விதமாக ஆத்திகனாக மாறுவது (கண்ணதாசன், பெரியார்தாசன்) தொடர்வதைப் பார்க்கும் போது கடவுள், இயற்கை குறித்த புரிந்துணர்வில் ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே வளரவே இல்லையென்பதும், எந்தக் காலத்திலும் அவை பற்றிய ஒரு முடிவான முடிவுக்கும் வராது என்பதையே காட்டுகிறது.

பாவமும், புண்ணியமும்

பாவமும், புண்ணியமும் மனிதர்களுக்காக மதங்களால் கட்டமைக்கப்பட்டதே. மற்ற உயிரினங்களுக்கு கடவுள் இருப்போ, பாவ புண்ணியம் பற்றிய பயமோ இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் மனிதனைத் தவிர்த்து மற்ற உயிரினங்கள் தன்மை அனத்தும் இயற்கை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது. மனிதனுக்கு அப்படி எந்த ஒரு தன்மையையும் இயற்கை நிர்ணயம் செய்யவில்லை, மாறாக மனிதனின் தன்மையை மனிதனே உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கே சுதந்திரமே நமக்குப் பிரச்சினையாகிப் போய் விட்டது தான் வருத்தத்துக்குரியது.

எந்த ஒரு உயிரினமும் உணவுக்காகவும், தற்காப்புக்காகவும் இன்னொரு உயிரை கொல்லும் பொழுது அது பாவம் பற்றி சிந்திப்பதில்லை. அது உயிர் வாழ இன்னொன்றை கொன்று தின்ன வேண்டும் என்று இயற்கை நிர்னயம் செய்திருக்கிறது. ஆதி மனிதனும் அப்படியே வாழ்க்கையை தொடங்கி இருக்க வேண்டும். அறிவு வளர்ச்சி ஏற்பட்ட காலங்களில் சிந்திக்கத் தொடங்கிய மனிதன் இரத்த ஓட்டம் கொண்ட உயிரினங்கள் அனைத்திற்கும், தீங்கு இழைக்கின்ற பொழுது தனக்கு வலி ஏற்படுவதைப் போல் அவைகளுக்கும் வலி ஏற்படும் என்று உணர்ந்தே பின்னாளில் கொல்லாமையை கடைபிடித்திருக்க வேண்டும்.

தொடர்ந்து சுயநலத்திற்காக மற்ற உயிரினங்களையும், மனிதர்களையும் துன்புறுத்துவோரை கட்டுப்படுத்தவே கடவுள் பெயரைச் சொல்லி பாவம் செய்தால் நரகத்திற்கும், புண்ணியம் செய்தால் சொர்கத்திற்குப் போவாய் என்று மதங்கள் வழி சொல்லி வந்திருக்கலாம். இந்த அளவிலே மட்டுமே இது உண்மையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பாவமும் புண்ணியமும் மனிதனை நெறிப்படுத்துவதற்காக மனிதனால் ஏற்படுத்தப் பட்டதேயன்றி, எந்த ஒரு கடவுளாலும் பாவம் புண்ணியம் பற்றி வரையறை செய்யப் படவில்லை. கடமையில் இருந்து மனிதன் வழுவாமல் இருக்கவே பாவம், புண்ணியம் பற்றி மதங்கள் வழி போதித்திருக்க வேண்டும்.

தாகத்தால் ஒருவர் வாடுகிற போது அவருக்கு உதவுவது கடமை என்று போதித்தால் யாரும் அலட்சியப்படுத்துவர். அதனாலே உதவினால் புண்ணியம், உதவாமல் போனால் பாவம் வந்து சேரும் என்று மனிதனை மிரட்டியும் ஆசை வார்த்தை காட்டியும் கடமை தவறாமல் இருக்கச் செய்ய ஏற்படுத்தப்பட்டவையாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

தவறு செய்யாத, மனசாட்சிக்கு பயப்படாத மனிதன் என்று யாரும் இருக்க முடியாது என்பதை உணர்ந்தே மதவாதிகள் பாவத்திற்கு பரிகாரம் தங்கள் கடவுளிடம் இருப்பதாக சொல்லி தங்கள் மதத்தின் எண்ணிக்கையை உயர்த்தவும், கல்லாவை நிரப்பவும் விடுக்கும் அறைகூவல்களே பாவிகளே என்னிடம் வாருங்கள், குரானை ஏற்பவரை அல்லாஹ் மன்னிப்பார், ஈசனைப் பனிந்தால் சொர்க்கம் என்பதெல்லாம்.

பாவம் புண்ணியம் என்று இருந்தால் அதற்கான தண்டனையும், பலனும் ஒரு தானியங்கி நீதிமண்றங்களால் மட்டுமே வழங்கப்படமுடியும் என்றே நினைக்கிறேன். பரிகாரம் செய்வதாலோ அல்லது எந்த ஒரு மதக் கொள்கையையும் ஏற்றுக் கொள்வதாலேயோ நீங்கள் செய்த பாவங்களிலிருந்து தப்பி விட முடியாது. பாவம் புண்ணியம் என்று ஒன்று இருந்தால் அவை ஒன்றை வைத்து ஒன்றை ஈடு செய்ய முடியாது என்பது என் திடமான நம்பிக்கை. பரிகாரம் செய்வதும் எந்த ஒரு மதக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதின் மூலியமாக பாவத்திலிருந்து தப்பிவிடலாம் என்று மதநம்பிக்கையாளர் சொன்னால் அது வெறும் பிழைப்பு வாதமே. பாவ புண்ணிய விசயத்தில் கடவுளின் பங்கு என்று எதுவும் இருக்காது, அப்படி இருக்குமாயின் அது அநீதியே ஆகும்.

எந்த ஒரு கடமையையும் லாப நட்டக் கணக்குப் பார்த்துச் செய்வோர் கடவுள், மதநம்பிக்கையாளர்களாக இருந்தாலும் அவர்களை அவர்களது கடுவுளே ஏற்கமாட்டார். சொர்கமும் நரகமும் வெறும் மத நம்பிக்கை தான் என்பதை பெறும்பாலானவர்கள் புரிந்து கொள்வதேயில்லை. அந்தந்த மதத்தை கடைப்பிடிப்பவர்க்கு மட்டுமே அந்த மதங்கள் கட்டி(கற்பனையாக) வைத்திருக்கும் சொர்கத்தில் இடமிருக்கும், இந்து மதத்தை ஏற்காத ஒரு இஸ்லாமியரையோ, ஒரு கிறிஸ்துவரையோ இந்துக்களின் சொர்கம் அனுமதிக்காது, இதுலிருந்து தெரியவில்லையா கடவுள் இப்படி ஒரு கீழ்தரமான சிந்தனையுடன் சொர்கத்தை தனித்தனியாக நிருவியிருப்பாரா என்று?.

மதவாதிகள் காட்டும் சொர்கம் என்னைப் பொறுத்து சோம்பேரிகளின் கூடாரமாகத்தான் இருக்க முடியும் அல்லது சாமியார்களின் மடமாகத்தான் இருக்க முடியும். உழைக்காமல் எதுவும் கிடைக்கும் இடம் என்பதான ஒரு மாயையைத்தான் ஒவ்வொரு மதத்தினரும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
பலன் கருதி செய்யும் எந்த ஒரு நண்மையும் புண்ணியமாகாது, அதைப்போல பாவம் தன்னைத் தாக்கும் என்று தெரிந்தே பிறருக்கு உதுவது பாவமன்று புண்ணியமே.